காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
வருகிற நவம்பரில் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும், காலநிலை மாற்றம் குறித்த, COP26 எனப்படும், 26வது உலக உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாறு, ஸ்காட்லாந்து மற்றும், பிரித்தானியாவின் பல்சமயத் தலைவர்கள், உலக அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
COP26 உலக மாநாட்டையொட்டி, இம்மாதம் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை, ஸ்காட்லாந்தில் மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்சமயத் தலைவர்கள், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு, பாரிஸ் உலக உச்சி மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
2015ம் ஆண்டில், பாரிஸ் மாநகரில் நடைபெற்ற COP21 உலக உச்சி மாநாட்டில், 196 நாடுகள் பங்குபெற்றன. அம்மாநாட்டில், உலகில் தற்போது நிலவும் வெப்பநிலையை, 1.5 டிகிரி செல்சியுஸ் அளவு குறைப்பதற்கு ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த அரசுகள் உறுதியளித்ததையும், 2005ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட, உயிரியல்நன்னெறி மற்றும், பல்லுயிர்களைப் பாதுகாப்பது குறித்த உலகளாவிய அறிக்கையையும் சமயத் தலைவர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.
உலக வெப்பநிலையை குறைப்பது குறித்த, 2050ம் ஆண்டின் இலக்கு நோக்கி மற்றவரோடு சேர்ந்து அரசுகள் பயணிக்குமாறு கூறியுள்ள பிரித்தானிய பல்சமயத் தலைவர்கள், அனைவரும் தங்களின் வாழும்முறையை மாற்றவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்