பிரேசில் நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார இறுதியில், பிரேசில் நாட்டின் தென்கிழக்கு மாநிலத்தின் தலைநகரான பBelo Horizonte அருகே உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 12 நபர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்றும், மண்ணில் புதையுண்டிருந்த ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளம் காரணமாக, 17,000ம் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்ற 145 நகராட்சிகள் அவசரகால தயார் நிலையில் இருப்பதாகவும் Minas Gerais மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற மாநிலங்களிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மழைபெய்து வருகிறது என்றும், Bahia மாநிலத்தில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழையினால் 26 இறப்புகள் பதிவாகியுள்ளதோடு, ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘எந்நேரமும் அணைகள் உடையலாம்’ என்ற அச்சம் இருப்பதால், Minas Gerais மாநிலத்தில் உள்ள அணைகளை, 42 பேர் கொண்ட குழு ஒன்று கண்காணித்து வருவதாகவும், மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அண்மை ஆண்டுகளில் Minas Gerais மாநிலம், குறைந்தது இரண்டு அணை உடைப்புகளைச் சந்தித்துள்ளது என்றும், 2019ம் ஆண்டில் புருமாடினோவில் ஒரு அணை உடைந்ததில் 200 பேரும், 2015ல் மற்றொரு அணை உடைந்ததில் 19 பேரும் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்