வாரம் ஓர் அலசல் – ஆதவனின் கீதம் 800ஆவது ஆண்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் மாதம் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருபவை, புனித செபமாலை அன்னை, புனித பிரான்சிஸ் அசிசியார், மறைப்பணியாளர்களுக்கான மாதம் என்பவைகளே. அவ்வகையில் புனித செபமாலை அன்னை திருநாளையும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளையும் திருஅவையில் நாம் சிறப்பித்து மகிழ்ந்தோம். அதிலும் குறிப்பாக தூய பிரான்சிஸ் அசிசியார் சபையைச் சார்ந்தவர்கள் இன்னும் சிறப்பாக இந்த யூபிலி ஆண்டினை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இயேசுவை அதிகமதிகமாக அன்பு செய்து, அவரது பாடுகளைத் தானும் அனுபவிக்கவேண்டும் என்ற அதீதமான விருப்பத்தால், இயேசுவிற்கு இருந்த பாடுகள் அனைத்தையும் தனது உடம்பில் ஏற்றவர் புனித பிரான்சிஸ் அசிசியார். ஐந்து திருக்காய வரம் பெற்றவரும், இயற்கையின் மீதுஅளவற்ற அன்பு கொண்டவருமான தூய பிரான்சிஸ் அசிசியாரின் ஐந்து திருக்காய வரத்தின் 800 ஆவது ஆண்டு மற்றும் ஆதவனின் கீதம் பற்றியும் இன்றைய நமது நிகழ்வில் நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி ஆரோக்கியம் ஜான்.
புனித பிரான்சிஸ் அசிசியார் சபையைச் சார்ந்தவரான அருள்பணி ஆரோக்கியம் ஜான் அவர்கள், சபையின் வடகிழக்கு இந்தியாவில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசி மறைப்பணி அறக்கட்டளையின் உறுப்பினர் ஆவார். இது இந்தியாவில் உள்ள திருத்தூதர் தூய தோமையார் மறைமாநிலத்தில் உள்ளது. உரோமில் உள்ள அந்தோணியம் திருப்பீடப்பல்கலைக் கழகத்தில் ஆன்மிக இறையியலில் பிரான்சிஸ்கன் ஆன்மிகத்தில் பட்டம் பெற்றவர். உரோமில் உள்ள மரியானோம் பல்கலைக்கழகத்தில் மரியியல் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 2022 ஆம் ஆண்டு முதல், பாமி (PAMI) எனப்படும் மரியியல் பன்னாட்டு திருப்பீட அகாடமியின் உறுப்பினராகவும், தற்போது அந்தோணியாம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் மரியியல் இறையியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். Franciscan Vision Global Summit-இன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக அனைவருக்கும் திறந்த மாதாந்திர ஆன்லைன் கூட்டங்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருபவர். பிரான்சிஸ்கன் பன்னாட்டு இதழின் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றி வரும் அருள்தந்தை ஆரோக்கியம் ஜான் ஆதவனின் கீதம் 800 ஆவது ஆண்டு குறித்து எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்