திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ   (ANSA)

கடவுள் திருஅவைக்கு பண்பாட்டு அடையாளத்தைக் கொடுத்தார்

விசுவாசத்தின் விடியலில், கடவுள் திருச்சபைக்கு ஒரு முழுமையான பண்பாட்டு அடையாளத்தைக் கொடுத்தார் . திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது காலம், வறுமையின் வலிகள், சமூகப் பிரிவினைகள், புதிய தொழில்நுட்பங்களின் சவால்கள் மற்றும் அமைதிக்கான உண்மையான ஏக்கங்கள் யாவும் தொடர்ந்து புதிய மாவாக அரைக்கப்பட்டு, கெட்ட நொதியுடன் புளிக்கவைக்கும் ஆபத்தில் இருக்கும் ஓர் ஆலைக்கல்லாக நமக்குக் காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெக்ஸிகோவில் நடைபெறும் Puebla de los Ángeles -இன் பதினேழாவது தேசிய மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு நவம்பர் 7, வெள்ளியன்று வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, விசுவாசத்தின் விடியலில், கடவுள் திருஅவைக்கு ஒரு முழுமையான பண்பாட்டு அடையாளத்தைக் கொடுத்தார் என்று உரைத்ததுள்ளார்.

திருஅவையின் மறைபரப்பு பணிக்கு இறைவேண்டல், தியாகங்கள் மற்றும் பொருள் பங்களிப்புகள் வழியாக பங்கேற்பாளர்களின் ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, அவர்களின் முயற்சிகள் உலகளவில் நற்செய்தி அறிவிப்பதற்கு உதவுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மத்தேயு நற்செய்தியில் (மத் 13:33) இடம்பெறும் புளிப்பு மாவு உவமையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, புளிப்பு மாவு நற்செய்தியைக் குறிக்கிறது, இது மாவில் உள்ள நொதி போல, கலாச்சாரங்களையும் மக்களையும் அவர்களின் அடையாளத்தை அழிக்காமல் உள்ளிருந்து மாற்றுகிறது என்பதை விளக்குகிறது என்று விளக்கியுள்ளார்.

இந்த மாற்றத்தை மெக்சிகோவின் நற்செய்தி அறிவிப்புப் பணியுடன் இணைத்துக் கூறிய திருத்தந்தை,  அங்கு நம்பிக்கை ஏற்கனவே இருந்த கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் இது குவாடலூப் அன்னை கன்னி மரியாவின் காட்சியில் அடையாளப்படுத்தப்பட்டது, இது ஒரு வலிமைவாய்ந்த கலாச்சார உருவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்வது மட்டும் போதாது, ஆனால் நாம் இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் (காண்க. மத் 7:21) என்று மொழிந்துள்ள திருத்தந்தை, உலகத்தின் மாவில் நம் கைகளை வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! நம் கைகளை அழுக்காக்காமல் மாவைப் பற்றிப் பேசுவது மட்டும் போதாது; நாம் அதைத் தொட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை கிறிஸ்துவின் இந்த அழைப்பை முழுமையாக வாழ பாடுபடுகிறது என்பதை நான் அறிவேன்; எனவே, உங்கள் தாராள முயற்சிகளுக்கு நன்றி கூறுகிறேன், அவருடைய தூய்மைமிகு இதய எண்ணங்களின் படி எப்போதும் மறைபரப்புப் பணியாளர்களாகவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும், அமைதியின் கைவினைஞர்களாகவும் இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறினார்.

ஆண்டவராகிய இயேசு உங்களின் எல்லா முயற்சிகளையும் பலனளிக்கச் செய்வாராக, நற்செய்தியின் விண்மீனாகத் திகழும் குவாடலூப்பின் புனித மரியாள், எப்போதும் தனது தாய்மையின் மென்மையுடன் உங்களுடன் சேர்ந்து, கடவுளிடம் செல்லும் பாதையை உங்களுக்குக் காண்பிப்பாராக என்று கூறி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 நவம்பர் 2025, 14:43