அனைவரிடமும் இரக்கம் காட்டுவதில் முன்மாதிரியாக திகழுங்கள்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 13, இவ்வியாழனன்று, இத்தாலியில் உள்ள புனித அகுஸ்தினார் துறவறச் சபையைச் சார்ந்த ஒதுங்குத் மடத் துறவியரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அச்சபையின் ஒழுங்குகளின்படி வாழ உறுதி எடுத்துள்ள பல்வேறு துறவற சபைகள் ஒன்றிணைந்து அமைந்துள்ள இந்தக் கூட்டமைப்பின் ஒன்றிப்பின் சான்றுபகர்தலைப் பாராட்டினார்.
ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பதும், பன்முகத்தன்மையில் வாழ்வதும், பல வழிகளில் உரையாடலுக்கும் பகிர்வுக்கும் குறைவான வாய்ப்பாக அமைந்துள்ள உலகில், தேவைப்படும் பணிக்கான பகிர்வின் இறைவாக்குச் சாட்சியத்தை வழங்குகிறது என்பதையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்களுக்கான உண்மையான மகிழ்ச்சி என்பது, ஆண்டவருடன் கொண்டுள்ள ஒன்றிப்பில் இருக்கிறது என்றும், அந்த ஒன்றிப்பு, அவர்களின் அழைப்பின் மூலம் முழு வாழ்வையும் அர்ப்பணித்துள்ள மணமகனாம் இயேசுவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவிலே நிலைத்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
வழிபாடு, இறைவேண்டல், நற்கருணை ஆராதனை, இறைவார்த்தையைத் தியானித்தல் மற்றும் குழும வாழ்வில் ஒருவருக்கொருவர் உதவுதல் ஆகியவற்றில் முழு மனதுடன் தங்களை அர்ப்பணித்து வாழ அவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இது அவர்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் தரும் என்றும், அவர்களின் குழுமங்களுக்கு வரும் ஏனைய சகோதரிகளுக்கு ஆயிரம் வார்த்தைகளை விட சிறந்த நம்பிக்கையின் செய்தியை வழங்கும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் ஒருவருக்கொருவர் அக்கறையையும் கவனத்தையும் காட்டுமாறும், தேவைப்படும் நேரங்களிலும், வாய்ப்புக்கள் கிடைக்கும்போதும், அனைவரிடமும் இரக்கம் காட்டுவதில் முன்மாதிரியாக திகழுமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
