திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டு திருத்தூது பயணத்திற்கான இலச்சினை திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டு திருத்தூது பயணத்திற்கான இலச்சினை 

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டு திருத்தூது பயணத்திற்கான இலச்சினை வெளியீடு!

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டு திருத்தூது பயணத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுவாக்கு 'கண்களை உயர்த்திப் பாருங்கள்' (யோவான் 4:35) என்பதாகும். இந்த விருதுவாக்கு அன்றாடக் கவலைகளைத் தாண்டி நம் பார்வையை உயர்த்த நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது கடவுளின் பிரசன்னத்தை மீண்டும் கண்டறியவும், மற்றவர்களிடம் திறந்த மனதோடு பழகவும் நம்மைத் தூண்டுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 6 முதல் 12 வரை இடம்பெறவுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின்  ஸ்பெயின் நாட்டு திருத்தூதுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ இலச்சினைகளையும் விருதுவாக்குகளையும்  வெளியிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

ஸ்பெயின் நாட்டு இலச்சினை, ஒன்றிணைந்து மேல்நோக்கிப் பார்க்கும் மனித உருவங்களால் ஆன ஒரு திறந்த, துடிப்பான வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு சமூகம், சந்திப்பு மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவைப் பிரதிபலிக்கிறது. இது வெறுமனே ஒன்றாகக் கூடி நிற்பதல்ல, மாறாக ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஒற்றுமையுடன் நடைபோடுவதைக் குறிக்கிறது.

மையத்தில் வீற்றிருக்கும் அன்னை மரியா, இந்த இயக்கத்தின் இதயமாகத் திகழ்கிறார். அனைவரையும் வரவேற்று, நம் பார்வையை இறைவனை நோக்கித் திருப்புகின்ற ஒரு தாய்மை நிலையை அவர் பிரதிபலிக்கிறார். இது அனைத்து மக்களுக்கும் ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட  விருதுவாக்கு  'கண்களை உயர்த்திப் பாருங்கள்' (யோவான் 4:35) என்பதாகும்.   இந்த விருதுவாக்கு அன்றாடக் கவலைகளைத் தாண்டி நம் பார்வையை உயர்த்த நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது கடவுளின் பிரசன்னத்தை மீண்டும் கண்டறியவும், மற்றவர்களிடம் திறந்த மனதோடு பழகவும் நம்மைத் தூண்டுகிறது.

இது நம்பிக்கை மற்றும் தியானத்திற்கான ஒரு அழைப்பாகும். நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், ஒரு பொதுவான வாழ்வின் நிதர்சனமான அடையாளங்களாக ஒற்றுமை, அழகு மற்றும் பிறரன்பு ஆகியவற்றை மீண்டும் கண்டறிய இது நம்மைத் தூண்டுகிறது.

இந்த 'பார்வையை உயர்த்தும்' செயல், ஸ்பெயினின் கத்தோலிக்கத் திருஅவை திருத்தந்தையின் வருகையை எத்தகைய மனப்பான்மையுடன் வரவேற்கிறது என்பதையும், அதாவது, திறந்த மனதோடும், இணைந்து பயணிப்பதற்கான தயார் நிலையோடும் அவரை வரவேற்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஏப்ரல் 2026, 15:05