செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைக் காக்க ‘மகத்தான மனிதநேயம்’ திருத்தூதுமடல்

மனித வாழ்க்கை இலாபத்தையும் செயல்திறனையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட 'தொழில்நுட்ப வெறியாக' மாறிவிடக் கூடாது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைக் காப்பது குறித்த ‘மகத்தான மனிதநேயம்’ (Magnifica humanitas) என்னும் தனது முதல் திருத்தூதுமடலில், மனிதகுலம் ஒரு திருப்புமுனையில் நிற்பதாக திருத்தந்தை பதினான்காம்  அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மனிதகுலத்தின் முன்னே இரண்டு வழிகள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒன்று அதிகாரம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு 'புதிய பாபேல் கோபுரத்தை' (Tower of Babel) உருவாக்குவது, மற்றொன்று  கடவுளும் மனிதகுலமும் மாண்புடனும் அமைதியுடனும் இணைந்து வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரேரும் நோவாரும் (Rerum Novarum) என்ற திருத்தூது மடலின் நினைவுநாளை முன்னிட்டு  2026 மே 15 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த திருத்தூது மடல், செயற்கை நுண்ணறிவு, மனித மாண்பு, சமூக நீதி மற்றும் அமைதி ஆகியவற்றை ஆழமாகப் பிரதிபலிக்கிறது என்றும், திருஅவையின் சமூகக் கோட்பாடு என்பது வெறும் விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, மாறும் காலத்திற்கு நற்செய்தியை மையமாகக் கொண்ட ஒரு பதில் என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு மனிதனின் மதிப்பும் அவரது உற்பத்தித்திறன் அல்லது சாதனைகளின் அடிப்படையில் அமைந்ததல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, கருவுறுதல் முதல் இயற்கை மரணம் வரையிலான வாழ்வுரிமையை வலியுறுத்தியுள்ளதுடன், கருக்கலைப்பு, கருணைக்கொலை, அடிமைத்தனம் மற்றும் சுரண்டல் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேலும் பெண்கள், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, மனித வாழ்க்கையை இலாபமும் தகுதியும் மட்டுமே தீர்மானிக்கும் 'தொழில்நுட்ப வெறிக்கு' (Technocratic mentality) எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களைப் போலச் செயல்பட முடியுமே தவிர, அதற்கு மனசாட்சியோ, இரக்கமோ, அன்போ அல்லது ஆன்மீக உணர்வோ இருக்க முடியாது என்று கூறியுள்ள திருத்தந்தை, தொழில்நுட்பம் மனிதனைத் தன் கட்டுப்பாட்டில் வைக்காமல், மனிதகுலத்திற்குப் பணிவிடை செய்வதை உறுதி செய்ய, அனைத்துலகக் கண்காணிப்பு, ஒழுக்கநெறிச் சட்டங்கள் மற்றும் பொறுப்பான பயன்பாடு ஆகியவை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

"போர், கண்காணிப்பு, தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றில் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கண்டித்துள்ள திருத்தந்தை, படிநிலை வழிமுறை ஒரு போரை நெறிமுறைப்படி நியாயப்படுத்த முடியும் என்ற கருத்தை நிராகரித்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை, தூதரக உறவு, மன்னிப்பு மற்றும் அமைதியை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் 'நியாயமான போர்' (Just war) என்ற கோட்பாட்டைக் கடந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, உண்மை, நீதி, ஒருமைப்பாடு மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடல் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு 'அன்பின் நாகரிகத்தை' (Civilization of love) கட்டியெழுப்ப கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த டிஜிட்டல் யுகத்திலும் கூட, மனிதகுலத்தின் உண்மையான பெருமை என்பது உறவுகளைப் பேணுவதிலும், இரக்கக் குணத்திலும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணிப்பதிலும்தான் அடங்கியுள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்க சமூகக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவங்களான பொதுநலன், வளங்களின் உலகளாவிய பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் அல்லது துணைத்தன்மை, மாந்தரின் ஒருமைப்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

இறுதியாக, அதிநவீன தொழில்நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவும் ஒரு சில ஆதிக்கக் குழுக்களின் கைகளில் மட்டுமே முடங்கிக் கிடக்கக் கூடாது என்றும், அவ்வாறு முடங்குவது சமூக இடைவெளியையும் புறக்கணிப்பையும் பெருக்கிவிடும் என்றும் கூறி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2026, 11:49