வத்திக்கானின் ஆறாம் பால்  அரங்கில் நடைபெற்ற சிறப்பு கர்தினால்கள் பேரவையைத் தொடங்கிவைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ. வத்திக்கானின் ஆறாம் பால் அரங்கில் நடைபெற்ற சிறப்பு கர்தினால்கள் பேரவையைத் தொடங்கிவைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ.  (@Vatican Media)

இன்றைய உலகின் சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சாட்சியாக விளங்க அழைப்பு:சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம்

திருத்தந்தை பதினான்காம் லியோ தலைமையில் வத்திக்கானில் நடைபெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் தொடக்க அமர்வில், போர்கள், வன்முறை, சமூகப் பிளவுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு சவால்கள் குறித்து கர்தினால்மார்கள் கலந்துரையாடினர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் தொடக்க அமர்வு, ஜூன் 26, வெள்ளியன்று, வத்திக்கானில் தொடங்கியது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 178 கர்தினால்மார்கள் பங்கேற்றனர்.

காலை புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் கர்தினால்மார்கள் பல்வேறு பணிக்குழுக்களாகப் பிரிந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

"எப்படிப்பட்ட உலகில் நாம் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறோம்?" என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், திருத்தந்தை தொடக்க உரையாற்றினார். பின்னர் போலந்து நாட்டின் கர்தினால் கிரெகோர்ஸ் ரிஸ், இன்றைய உலகின் துன்பங்கள், சவால்கள் மற்றும் நம்பிக்கையின் அடையாளங்களை மையமாகக் கொண்டு விவிலியச் சிந்தனையை வழங்கினார்.

கலந்துரையாடல்களில், சமூக மற்றும் அரசியல் பிளவுகள், வன்முறை, போர்கள், தவறான தகவல் பரவல், மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்கள், யூத எதிர்ப்பு மனப்பான்மை, தனிமனிதவாதம், குடும்பச் சீர்கேடு, தனிமை, இளைஞர் வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் பயன்பாடு, நிறுவனங்களின் மீதான நம்பிக்கையின்மை, மதச்சார்பின்மை, புலம்பெயர்வு, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து கர்தினால்மார்கள் கவலை தெரிவித்தனர்.

இந்தச் சவால்களுக்கு மத்தியில், திருஅவை அனைவரையும் அரவணைக்கும் தாயாகவும், அனைவருக்கும் திறந்த இல்லமாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பங்குவாழ்வை புதுப்பித்து, துன்புறுவோருக்கு அருகில் நிற்பதன் மூலம் மனித மாண்பு, அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொதுநலனை பாதுகாப்பதே திருஅவையின் முக்கியப் பணியாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ஒன்றிணைந்த பயணம் (Synodality), பிறரன்புப் பணிகள், ஒற்றுமை, கல்வி, கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயும் சமயங்களுக்கிடையேயும் உரையாடல் மற்றும் இறைவேண்டல் ஆகியவை இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள இன்றியமையாதவை எனக் குறிப்பிடப்பட்டது. அதேவேளையில், அதிகரித்து வரும் குருத்துவ மற்றும் துறவற அழைப்புகள், மக்களின் இறைபக்தி மற்றும் இறைமக்களின் மகிழ்ச்சியான விசுவாச வாழ்வு நம்பிக்கையின் அடையாளங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

இறுதியாக, துன்பமும் தனிமையும் நிறைந்த உலகிற்கு பதிலளிக்கும் வகையில், அனைவரையும் அரவணைக்கும் சமுதாயங்களை உருவாக்கி, உண்மையான உறவுகளை வளர்த்து, கிறிஸ்துவுடனான ஆழமான சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் திருஅவை தனது பணியை நிறைவேற்ற வேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 14:21