2026 ஆகஸ்ட் 15 அன்று காஸ்டெல் கந்தோல்ஃபோவில் உள்ள புனித தோமையார் வில்லனோவா பங்குத் தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள். 2026 ஆகஸ்ட் 15 அன்று காஸ்டெல் கந்தோல்ஃபோவில் உள்ள புனித தோமையார் வில்லனோவா பங்குத் தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்.  (ANSA)

திருவழிபாடு கிறிஸ்தவ வாழ்வின் மையமாக விளங்க வேண்டும் : திருத்தந்தை

திருவழிபாடும் மறைக்கல்வியும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தி, கிறிஸ்தவ உருவாக்கத்தில் திருவழிபாட்டிற்கு மைய இடம் வழங்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருவழிபாடும் மறைக்கல்வியும் இடையிலான தொடர்பை திருச்சபை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், கிறிஸ்தவ உருவாக்கத்தில் திருவழிபாடு மையப் பங்கு வகித்து, இறைமக்களை கிறிஸ்துவிடம் இன்னும் ஆழமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 24 முதல் 27 வரை கத்தானியா நகரில் “உருவாக்கும் திருச்சபை: திருவழிபாடும் கிறிஸ்தவத் தொடக்க வாழ்வும்” என்ற கருப்பொருளில் இடம்பெறும்   இத்தாலியின் 76ஆம் தேசிய திருவழிபாட்டு வாரத்தில் பங்கேற்றவர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பிய செய்தியில் இவ்வாறு திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவத் தொடக்க வாழ்வு என்பது திருவருட்சாதனங்களைப் பெறுவதற்கான தயாரிப்பு மட்டுமல்ல; நம்பிக்கையும் கிறிஸ்துவுடனான ஒன்றிப்பும் பிறக்கும் “கருவறை” என்று  குறிப்பிட்ட திருத்தந்தை, தொடக்கத் திருச்சபையில் மறைக்கல்வியும் திருவழிபாடும் நெருக்கமாக இணைந்திருந்ததை எடுத்துக்காட்டியதுடன் அந்த அடிப்படைக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் “திருவழிபாட்டில் கிறிஸ்துவின் மறைபொருள் நம்மை ஆட்கொண்டு, மாற்றி, புதிய படைப்புகளாக நம்மை உருவாக்குகிறது” என்று கூறிய திருத்தந்தை, இறைமக்களின் செயல்பாட்டுப் பங்கேற்பு, திருவழிபாட்டு சடங்குகள் மற்றும் அடையாளங்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல், திருச்சபை ஒன்றிப்பை வளர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

இறுதியாக திருவழிபாடு இறைவார்த்தையைக் கேட்பதற்கான சிறப்புமிக்க இடம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, திருப்பலியில் பெறப்படும் நம்பிக்கை அன்றாட வாழ்விலும் வெளிப்பட்டு, நன்மை, நல்லிணக்கம் மற்றும் அமைதியின் கனிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஆகஸ்ட் 2026, 13:54