புனித பிரான்சிஸ் அசிசியாரின் 800-வது ஆண்டு நினைவு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
புனித பிரான்சிஸ் அசிசி இறந்த 800-வது ஆண்டு நினைவையொட்டி இடம்பெற்ற சிறப்புக் கண்காட்சியின் போது, அவரது புனித உடலை வணங்க திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் அசிசி நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தை, ஒரு 'ஆழ்ந்த அனுபவம்' என்று விவரித்த கர்தினால் பரோலின் அவர்கள், இது அகில உலகத் திருஅவைக்கும், தனிப்பட்ட நம்பிக்கை வாழ்விற்கும் புனித பிரான்சிஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
அசிசியின் புனித மடத்தின் தகவல் தொடர்பு அலுவலக இயக்குநரான அருள்பணி ஜூலியோ செசாரியோ அவர்களுக்கு கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த நேர்காணலில், "புனித பிரான்சிஸின் வாழ்க்கை திருஅவைக்குக் கிடைத்த ஒரு கொடை" என்றும், "பணிவு, சேவை மற்றும் அருளடையாள வாழ்வின் வழியாக நம்பிக்கையாளர்களை மீண்டும் கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லும் ஒரு கருவியாக அவர் திகழ்கிறார்" என்றும் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, கிறிஸ்துவின் காயங்களைத் தம் உடலில் தாங்கியதன் மூலம் அவர் கிறிஸ்துவோடு கொண்டிருந்த ஒன்றிப்பு, இன்றைய உலகின் பற்றுறுதிக்கும் நம்பிக்கைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்று குறிப்பிட்டார் கர்தினால் பரோலின்.
மேலும் இன்றைய காலத்தின் சவால்களை எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், பிளவுபட்டுக் கிடக்கும் இவ்வுலகிற்கு அன்பினால் பதில் அளிக்க வேண்டும் என்றும், குறிப்பாக, எதிரிகளிடமும் அன்பு காட்டி, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்துடன் செயல்படுபவர்களிடமே உண்மையான நம்பிக்கை காணப்படுகிறது என்றும் கூறினார்.
இத்தகைய கண்காட்சிகள், அறநெறி சார் வழிகாட்டுதலுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றன என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், மேலும் "இந்த கண்காட்சியானது நிலையற்ற சமூக சூழலில் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலை வழங்குவதோடு, அண்மையில் நிறைவடைந்த யூபிலி ஆண்டின் செய்தியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்