"மனித குரல்களையும் முகங்களையும் பாதுகாப்பது” என்ற தலைப்பில் தகவல் தொடர்பு பேராயம் ஏற்பாடு செய்த மாநாடு. "மனித குரல்களையும் முகங்களையும் பாதுகாப்பது” என்ற தலைப்பில் தகவல் தொடர்பு பேராயம் ஏற்பாடு செய்த மாநாடு. 

அர்பானியப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மாநாடு

இன்றைய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மனிதர்களை ஓரங்கட்டாமல் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு மாநாடு அமைகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

உலகத் தகவல் தொடர்பு நாளை முன்னிட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த அனைத்துலக மாநாடு பாப்பிறை அர்பானியப் பல்கலைக்கழகத்தில் மே 21, வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இம்மாநாட்டைத் தகவல் தொடர்புக்கான திருப்பீடத் துறை, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறை மற்றும் புனித இருபத்தி மூன்றாம் யோவான் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

'மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல்' என்ற இந்த மாநாட்டின் கருப்பொருள், இந்நிகழ்விற்கான திருத்தந்தையின் செய்தியைப் பிரதிபலிப்பதோடு, தொழில்நுட்ப வளர்ச்சியின் மையப்புள்ளியாக எப்போதும் மனித மாண்பு மட்டுமே திகழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தனிமனிதர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துப் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மனித இடமாற்றத்திற்கு வழிவகுக்காமல் மனிதகுலத்திற்குச் சேவை செய்வதை உறுதிசெய்வதும், 'தகவல் தொடர்பு என்னும் கொடையை மனிதனின் மிக ஆழமான உண்மையாகப் பாதுகாக்க வேண்டும்' என்ற திருத்தந்தையின் சிந்தனையை உலகிற்கு எடுத்துரைப்பதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாநாட்டில், சமூகத் தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜோஸ் தொலந்தினோ டி மென்டோன்சா ஆகியோர் தொடக்க உரை ஆற்றவுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2026, 14:16