ஹார்முஸ் ஹார்முஸ்  

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்

ஹார்முஸ் நீரிணையில் அதிகரித்து வரும் பதற்றம், அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து ஈரானின் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரக எண்ணெய்க் கப்பல்கள் மீதான ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த மோதல் தீவிரமடைந்துள்ள போதிலும், ஒரு தூதரக உடன்படிக்கை இன்னும் சாத்தியமே என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், "அதிபரின் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய இந்த அண்மைய நடவடிக்கை, அப்பகுதியில் உள்ள வணிகக் கப்பல்களுக்கு ஈரான் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், பல ராணுவ தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது" என்று அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளையும் பாதித்துள்ள இந்த மோதலின் போது, ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள் தங்களது இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், நான்கு பேர் பலத்த காயம் அடைந்தது உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், யோர்தான்  மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் மீது ஒரே இரவில்  தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது இந்த மோதலால் அந்தப்பகுதி மோசமாகப் பாதிப்படைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், " ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மீண்டும் ஒரு கடற்படை முற்றுகையை விதிக்கும்"  என்றும், "உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20 விழுக்காடு கட்டணம் விதிக்கப்படும்"  என்றும் அதிபர் டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளார்.

அமைதியான தீர்வை எட்டுவதற்கான தூதரக முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், இந்த அண்மைய தாக்குதல்கள் அப்பகுதியின் நிலைத்தன்மை, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் மோதல் மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைத்துலக கவலைகளை எழுப்பியுள்ளன.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூலை 2026, 12:52