விவிலியத் தேடல்
திபா 2 : 7 - 8, 10 - 11
கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதரிகளே, சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அற்புத நாமத்திலே என் அன்பான வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று நாம் சிந்திக்க இருக்கும் திருப்பாடல் மிக ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது. இது நாடுகளை ஆளுகிற அரசர்களுக்கு முன்பாக இருக்கும் இரண்டு வழிகளைத் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, இறைவனுக்கு உகந்த நல்ல வழியைக் கற்றுக்கொடுக்கும் ஒரு போதனைப் பாடலாக இது திகழ்கிறது.
திருத்தூதர் பணிகள் நான்காம் அதிகாரம், 25-வது இறைவார்த்தையோடு (Acts 4:25) இந்தத் திருப்பாடலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது மெசியாவைப் பற்றிய முன்னறிவிப்பு என்பது மிகத் தெளிவாகப் பொருந்துகிறது. வரலாற்று ரீதியாக, இஸ்ரயேல் நாட்டின் அரசன் முடிசூட்டிக் கொள்ளும் பொழுதோ அல்லது அந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் பொழுதோ பாடப்படும் ஒரு பாடலாக இது விளங்கியது. இது இரண்டு முக்கியக் காரியங்களை வழங்குகிறது. முதலாவது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. இரண்டாவது இறைவனின் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களை வீழ்த்தும் வல்லமை வாய்ந்த பாடலாக இது கருதப்படுகிறது. இந்தத் திருப்பாடல் தாவீது அரசனின் ஆட்சியைக் குறித்துப் பேசினாலும், அதன் உண்மையான நோக்கம் மெசியா (கிறிஸ்து) பற்றியதாகும். கிறிஸ்து அரசருடைய ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப் புகழ்ந்து பாடும் பாடலாக இது அமைகிறது.
இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரை, அரசர் என்பவர் சாதாரண மனிதர் அல்ல. அவர் கடவுளால் திருவெண்ணெய் பொழிவு (Anointed) செய்யப்பட்டவர். அரசரை எதிர்ப்பது என்பது, அந்த அரசரைத் தேர்ந்தெடுத்த கடவுளையே எதிர்ப்பதாகும். எனவே, அரசரை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனமான உண்மை. Mashiach என்ற 'எபிரேய' மொழிச் சொல். இதற்கு 'திருவெண்ணெயால் பொழிவு செய்யப்பட்டவர்' என்று பொருள். Messias என்ற கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படும் சொல். Christos என்ற சொல் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்படும்போது 'கிறிஸ்து' என்று மாறுகிறது. இவ்வாறு எபிரேய மொழியில் 'மெசியா' என்பதும், கிரேக்க மொழியில் 'கிறிஸ்து' என்பதும் இணையான அர்த்தங்களைக் கொண்ட சொற்களாகும். இவை இரண்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவெண்ணெய் பொழிவு பெற்றவரைக் குறிக்கின்றன.
இந்தத் திருப்பாடல் ஒரு இணையணி (Parallelism) அமைப்பில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஒரு கருத்தைச் சொல்லி, அதை மீண்டும் ஒரு மாற்று வடிவில் வலியுறுத்திக் கூறும் சிறப்பைக் கொண்டது. இறைவனின் திட்டத்தையும், அவரது மகனாகிய மெசியாவின் ஆட்சியையும் உலகிற்குப் பறைசாற்றும் உன்னதப் பாடல் இது.கடவுளின் வார்த்தைகளுக்குப் பணிந்து, அவரது அருள் பொழிவு பெற்ற கிறிஸ்துவை நம் வாழ்வின் அரசராக ஏற்றுக்கொள்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்