இக்காலத்தின் இறைவாக்கினர்களை வரவேற்கவேண்டியதன் தேவை

ஒவ்வொருவரும் இறைவாக்கினர்கள், ஏனெனில் திருமுழுக்கு வழியாக நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர் பணி என்னும் கொடையைப் பெற்றுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எந்த ஒரு முடிவையும் எடுக்க முயலும்போது, செபித்து, தூய ஆவியாருக்கு அழைப்புவிடுப்பதுடன், மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்குச் செவிமடுக்கும் ஆவலை நாம் கொண்டிருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை இரண்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் முவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசக வார்த்தைகளின் ஒரு பகுதியான, “இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்” (மத் 10:41) என்பதை மையமாக வைத்து தன் உரையை வழங்கினார்.

இக்காலத்தின் இறைவாக்கினர்களை வரவேற்கவேண்டிய தேவை குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்கள், ஏனெனில் திருமுழுக்கு வழியாக நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர் பணி என்னும் கொடையைப் பெற்றுள்ளோம் என மேலும் கூறினார்

தூய ஆவியாரின் செயல்பாட்டின் கீழ் இருக்கும் நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும், கடவுளின் திட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இயைந்தவகையில் நடக்கவும் மற்றவர்களுக்கு உதவுபவரே இறைவக்கினர் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவாக்கினர் என்பவர், இயேசுவை பிறருக்கு சுட்டிக்காட்டுபவர், இயேசுவுக்கு சான்றுபகர்பவர், நிகழ்காலத்தை வாழ உதவுபவர் மற்றும், இறைத்திட்டத்திற்கு ஏற்ப  வருங்காலத்தைக் கட்டியெழுப்ப உதவுபவர் என உரைத்த திருத்தந்தை, இறைவாக்கினர்களாகவும் இயேசுவின் சாட்சிகளாகவும் இருக்கும் நாம் மற்றவர்களின் வாழ்வில் இறைவனின் ஒளியைக் கொணரும்பொருட்டு இயேசுவுக்குச் சாட்சியாக வாழ்கின்றோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயேக் கேட்போம் எனவும் விசுவாசிகளை விண்ணபித்தார்.

கடவுளின் செய்தியைத் தாங்கிச் செல்பவர்களாக ஒவ்வொருவரையும் அவர்களின் அழைப்பிற்கு இயைந்தவகையில் வரவேற்று அவர்களுக்கு செவிமடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் செபித்து, தூய ஆவியாரின் துணையை நாடுவதுடன், மற்றவர்களுக்கு செவிமடுக்க முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் நம்மால் வரவேற்கப்படுபவர்களாக உணரவைக்கப்படவேண்டும், ஏனெனில், ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒரு கொடை என மேலும் கூறினார்.

இவ்வாறு, நாம் மற்றவர்களுக்குச் செவிமடுக்கவும், அவர்களைப் புரிந்துகொள்ளவும் முன்வரும்போது, எத்தனையோ மோதல்கள் தவிர்க்கப்பட்டு, அமைதியான தீர்வுகள் காணப்படமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூலை 2023, 14:19

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >