தேடுதல்

நம் இதயங்களை வியப்பில் ஆழ்த்தும் இறைவன்

நம் இதயங்களைத் தொட்ட இயேசுவைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் மகிழ்ச்சியை அடைய முடியும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது வாழ்க்கையை முன்னேற்ற உதவிய நல்உணர்வுகள் மற்றும் அனுபவங்களை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு நாம் பகிரும்போது இயேசு நமது இதயங்களை வியப்பில் ஆழ்த்துகின்றார், நாம் வாழ்கின்ற சூழலை இன்னும் அழகாக மாற்றுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 14 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எம்மாவூஸிலிருந்து திரும்பி வந்த சீடர்கள் இருவரும் இயேசுவை சந்தித்ததை பிற சீடர்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் தோன்றினார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், சீடர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதன் வழியாக நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள் என்றும் கூறினார்.

உயிர்த்த இயேசுவின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்றும், இயேசு உயிர்த்த அந்த உயிர்ப்பின் மாலை வேளைக்கு நம்மை இந்த நற்செய்திப் பகுதி அழைத்துச் செல்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

பல வதந்திகள், பயனற்ற செய்திகள், மேலோட்டமானவைகள் என தீமையை விளைவிக்கக்கூடிய பல ஆயிரம் செய்திகள் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகின்றன, அதே நேரத்தில் நல்ல செய்திகளும் நம்மை வந்தடைகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நல்லதை, நம் வாழ்க்கையைத் தொட்ட உண்மைகளை மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடவுளைச் சந்தித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கடினப்படுகின்றோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நம் இதயங்களைத் தொட்ட இயேசுவைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் மகிழ்ச்சியை அடைய முடியும் என்றும் கூறினார்.

நம் இதயங்களில் மகிழ்ச்சி என்னும் ஒளியை ஏற்றிய, நம் கண்ணீரைத் துடைத்த, நம் அருகில் இருந்து நமக்கு நம்பிக்கை, மன்னிப்பு, ஆறுதல், ஆற்றல், உற்சாகம் மென்மை, போன்றவற்றை தரும் இறைவனைப் பற்றி நாம் பிறரிடம் பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இயேசுவுடனான நமது சந்திப்பைப் பற்றி குடும்பம், சமூகம் மற்றும் நண்பர்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும், நமது வாழ்க்கையை முன்னேற்ற உதவிய நல் உணர்வுகள், எண்ணங்கள், தூண்டுதல்கள், நம்பிக்கையின் வாழ்க்கையில் செல்ல உதவும் சவால்கள், முயற்சிகள் போன்றவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

நாம் ஒவ்வொருவரும் இயேசுவைச் சந்தித்த ஒரு வலுவான தருணத்தைப் பெற்றிருக்கின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் இறைவனை மகிமைப்படுத்துவதற்காக அதனை நான் பிறருடன் பகிர்ந்துள்ளேனா? பிறர் பகிர்வதற்கு செவிசாய்த்திருக்கின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார்.

நாம் வாழ்கின்ற சமூகம் இறைவனை சந்திக்கின்ற இடமாக மாறவும், நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக மாறவும் அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறி கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையின் இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2024, 13:12

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >