நம்பிக்கையின் சக்திவாய்ந்த ஆதாரம் ஒருங்கிணைப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒருங்கிணைப்பு அனைத்து மனிதகுலத்திற்கும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறுகிறது என்றும், மதம் என்பது மோதலின் ஆதாரம் அல்ல, மாறாக குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆதாரம் என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 17 புதன்கிழமை முதல் 18 வியாழன் வரை கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறும் உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களுக்கான எட்டாவது மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
வன்முறை மோதல்களால் குறிக்கப்பட்ட இக்காலத்தில், மதங்களுக்கு இடையிலான உரையாடலின் முக்கிய பங்கை இம்மாநாடானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், உடைந்த மற்றும் காயமடைந்த நமது உலகை குணப்படுத்துவதற்கான பொதுவான விருப்பத்தில் ஒன்றிணைந்து, நட்பை புதுப்பிக்கவும், புதியவற்றை உருவாக்கவும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து கூடியிருப்பதற்காக நன்றி கூறினார் திருத்தந்தை.
"மதங்களின் உரையாடல் - எதிர்காலத்திற்கான ஒருங்கிணைப்பு" என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இம்மாநாடானது, இறைத்தன்மையுடன் ஒவ்வோர் உண்மையான மத உந்துதலையும், தனிநபர்களையும் நாடுகளையும் பிணைக்கும் ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் பற்றிய நமது உள்ளார்ந்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடலையும் ஒத்துழைப்பையும் வளர்க்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
"எதிர்காலத்திற்கான ஒருங்கிணைப்பு" என்பது ஒரு சுருக்கமான முழக்கம் அல்ல, மாறாக ஏற்கனவே பலனளித்த ஒரு வாழும் எதார்த்தம் என்று கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலத்தில் நடைபெற்ற மதங்களுக்கிடையேனான உரையாடல் பற்றிய கூட்டங்களையும் அதன் விளைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
1986- ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் ஆசிஸியில் செபத்திற்காகக் கூட்டப்பட்ட மதத் தலைவர்களின் வரலாற்றுக் கூட்டம், மதங்களிடையே அமைதி இல்லாமல் நாடுகளிடையே அமைதி இருக்க முடியாது என்பதை நிரூபித்தது என்றும், அண்மையில், உலக அமைதி மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான மனித உடன்பிறந்த உணார்வு நிலை குறித்த ஆவணம், 2019 ஆம் ஆண்டில் அபுதாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அல்-அஸாரின் கிராண்ட் இமாம் அஹ்மத் அல்-தயிப் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது, மத ஒருங்கிணைப்பு உலக அமைதி மற்றும் சகவாழ்வை எவ்வாறு முன்னேற்றும் என்பதற்கான தெளிவான வரைபடத்தை வழங்கியது என்றும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து வன்முறை மற்றும் தீவிரவாதத்தை கண்டித்து, புலம்பெயர்ந்தோரைப் பராமரிப்பதற்காக வாதிட்டு, அமைதிக்காக இணைந்து பணியாற்றுமாறு அனைத்துத் தலைவர்களையும் அழைத்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாநாட்டின் கடைசிக் கூட்டத்திலும் இதே உணர்வை நாம் கண்டோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
