தேடுதல்

அன்பு இறப்பை வெற்றிகொள்கிறது! அதுவே நிலைவாழ்விற்கான பாதை!

விசுவாசிகள் துயரத்திற்கு அப்பால் இருக்கின்ற நிலைவாழ்வைப் பார்க்க வேண்டும்; இறப்பை வாழ்க்கையாகவும், துயரத்தை நம்பிக்கையாகவும் மாற்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீது தங்கள் கண்களைப் பதிக்க வேண்டும் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பு இறப்பை வெற்றிகொள்கிறது, அன்பில், கடவுள் நம்மை நம் அன்புக்குரியவர்களுடன் ஒன்று சேர்ப்பார். பிறரன்புப் பணிகளில் நாம் ஒன்றித்துப் பயணித்தால், நம் வாழ்க்கையே கடவுளிடம் எழும் இறைவேண்டலாக மாறி, இறந்த நம்பிக்கையாளர்களுடன் நம்மை ஒன்றிணைத்து, நிலை வாழ்வின் மகிழ்ச்சியில் அவர்களை மீண்டும் சந்திக்கக் காத்திருக்கும்போது நம்மை அவர்களிடம் நெருங்கி வரச் செய்கிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 2, ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரின் திருவிழாவை முன்னிட்டு, உரோமையிலுள்ள வெரோனா கல்லறையில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இறந்தவர்களை, குறிப்பாக, நம் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதன் அர்த்தத்தைப் பற்றி உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ நினைவு என்பது வெறும் ஏக்கம் அல்லது துயரம் அல்ல, மாறாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அடிப்படையாகக் கொண்ட எதிர்நோக்கு நிறைந்த இறை நம்பிக்கைச் செயல் என்று விளக்கினார்.

இறப்பின் மீதான இயேசுவின் வெற்றியின் வழியாக, நமது நினைவுகள் கடவுள் வாக்குறுதியளித்த எதிர்கால நிலைவாழ்விற்கான அடையாளங்களாகின்றன என்றும், முடிவற்ற விருந்தான அவ்வாழ்வில் நாம் இயேசுவுடனும் நமக்கு முன் சென்றவர்களுடனும் மகிழ்வடைவோம் என்றும் மொழிந்தார்.

அன்புதான் இந்த நிலைவாழ்விற்கான பாதையாக அமைகிறது என்றும், பசித்தவர்களுக்கு உணவளித்தல், அந்நியரை வரவேற்றல், நோயுற்றோரைக் கவனித்துக்கொள்ளல் போன்ற பிறரன்புப் பணிகள் மற்றும் இரக்கச் செயல்கள் வழியாக  நாம் ஏற்கனவே கடவுளின் நிலையான அன்பில் பங்கு கொள்கிறோம், இறந்தவர்களுடன் ஒன்றித்திருக்கின்றோம் என்றும் விவரித்தார்.

விசுவாசிகள் துயரத்திற்கு அப்பால் இருக்கின்ற நிலைவாழ்வைப் பார்க்க வேண்டும் என்றும், இறப்பை வாழ்க்கையாகவும், துயரத்தை  நம்பிக்கையாகவும் மாற்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீது தங்கள் கண்களைப் பதிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதியை நம்பி, "அன்பு இறப்பை வெற்றிகொள்ளும்" என்றும், ஒரு நாள் கடவுளின் பிரசன்னத்தில் நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியில் மீண்டும் ஒன்றிணைவோம் என்றும் எதிர்நோக்குடன் வாழ்க்கையில் வரும் துயரங்களை நாம் கடக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 நவம்பர் 2025, 15:40