உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக ஒன்றிணைய இளையோருக்கு அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இத்தாலியின் மக்கள் தொகை சவால்களுக்கு மத்தியில், இளைஞர்கள் அவநம்பிக்கை மற்றும் அறியாமை இரண்டையும் தவிர்க்குமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 21, சனிக்கிழமையன்று இத்தாலியின் பாலிகோரோ திட்டத்தின் (Policoro Project) உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடுவதிலும் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
மேலும், வேலை மற்றும் வாழ்க்கையில் சமூகம் சார்ந்த அணுகுமுறைகளின் அவசியத்தை எடுத்துரைத்த திருத்தந்தை, உற்சாகத்தையும் மீண்டெழும் திறனையும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
சமூக உறவுகளும் ஒன்றிப்பும் துன்பங்களை வெல்வதற்கான முக்கிய வழிகள் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, வழிகாட்டுதலுக்காக நற்செய்தி மற்றும் திருஅவைப் போதனைகளை நோக்குமாறும், குடிமை மற்றும் அறப்பணிகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய வரலாற்று மாமனிதர்களிடமிருந்து உத்வேகம் பெறுமாறும் அவர்களுக்கு நினைவூட்டினார்.
1995-ஆம் ஆண்டு அருள்பணியாளர் மரியோ ஓபர்ட்டியால் தொடங்கப்பட்ட பாலிகோரோ திட்டம், இத்தாலியின் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தெற்குப் பகுதி இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதையும், வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஊழல், உழைப்புச் சுரண்டல் மற்றும் மாஃபியா ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக இது செயல்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
