உக்ரைன் அரசு தலைவருடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அனைத்துலக சமூகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்போடு, உக்ரைன் நாட்டில் இடம் பெற்று வரும் மோதல்கள் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஒரு நீதியான மற்றும் நிலையான அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை தெரிவித்துக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை உக்ரைன் நாட்டு அரசுத் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
நட்பு ரீதியிலான அந்த உரையாடலின் போது, திருத்தந்தை உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், உக்ரைன் மக்கள் மீது தாம் கொண்டுள்ள நெருக்கமான அன்பையும் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து இந்த உரையாடலின்போது மனிதாபிமானச் சூழல் குறித்து ஆலோசித்ததாகவும், போரினால் பாதிக்கப்பட்டுத் துயரப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்வதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மனிதாபிமான முயற்சிகளை ஊக்குவிப்பது குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, போர்க்கைதிகளை விடுவிப்பது தொடர்பான விவகாரங்கள் இதில் முக்கியமாக இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
