தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் புதன்கிழமை பொது மறைக்கல்வி உரையின்போது ஆர்மேனிய கத்தோலிக்கத் தலைவர் முதலாம் அராம் அவர்களைச் சந்தித்தார். திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் புதன்கிழமை பொது மறைக்கல்வி உரையின்போது ஆர்மேனிய கத்தோலிக்கத் தலைவர் முதலாம் அராம் அவர்களைச் சந்தித்தார்.  (@Vatican Media)

கிறிஸ்தவ ஒற்றுமை மற்றும் அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்பு!

கிறிஸ்தவ சபைகளை ஒன்றிணைக்கும் பணிகளில் முதலாம் அராம் அவர்கள் காட்டிய நீண்டகால அர்ப்பணிப்பை திருத்தந்தை பாராட்டினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 20 , புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரையின்போது அர்மீனிய அப்போஸ்தலிக்க திருச்சபையின் பிரதிநிதிகளுடன் வந்திருந்த அத்திருச்சபையின் தலைவர் முதலாம் அராம் அவர்களைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மீண்டும் வரவேற்றுத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் அர்மீனிய அப்போஸ்தலிக்க திருச்சபைக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதில் இந்த வருகை ஒரு முக்கியமான மைல்கல் என்று திருத்தந்தை வர்ணித்தார்.

புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் கல்லறைகளுக்கு கத்தோலிக்கோஸ் மேற்கொண்ட இந்தப் புனிதப் பயணத்தைப் தூய ஆவியார் ஆசீர்வதிக்க வேண்டுமென்று திருத்தந்தை இறைவேண்டல் செய்தார்.

இரு திருச்சபைகளுக்கும் இடையே முழுமையான ஒற்றுமை நிலவவும், இந்தச் சந்திப்பு கிறிஸ்தவ ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கவும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்தவ சபைகளை ஒன்றிணைக்கும் பணிகளில் முதலாம் அராம் அவர்கள் காட்டிய நீண்டகால அர்ப்பணிப்பையும், கத்தோலிக்க திருச்சபைக்கும் கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகளுக்கும் இடையே நடந்த இறையியல் விவாதங்களுக்கு அவர் அளித்த ஆதரவையும்  பாராட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் அனைவரும் முழுமையாக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக, அர்மீனியப் புனிதர்கள் மற்றும் அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்து  தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2026, 11:07