தேடுதல்

திருத்தந்தை இத்தாலி குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லாவைச் சந்தித்தபோது (கோப்புப் படம்) திருத்தந்தை இத்தாலி குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லாவைச் சந்தித்தபோது (கோப்புப் படம்) 

இத்தாலி குடியரசுத் தலைவர் மட்டரெல்லாவின் 85ஆவது பிறந்தநாள்: செபங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்த திருத்தந்தை

இத்தாலி குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லாவின் 85ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வாழ்த்துத் தந்தி அனுப்பி, அவரது சேவையைப் பாராட்டியதுடன், இத்தாலியின் பாதுகாவலர்களான புனித பிரான்சிஸ் மற்றும் புனித கேத்தரின் ஆகியோரின் பாதுகாப்பில் அவரை ஒப்படைத்து, குடும்பத்தினருக்கும் இத்தாலி மக்களுக்கும் திருத்தூது ஆசீரை வழங்கினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இத்தாலி குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா அவர்களின் 85ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பி, அவருக்காக தனது செபங்களை உறுதியளித்துள்ளார்.  இத்தாலியின் பாதுகாவலர்களான அசிசி நகர் புனித பிரான்சிஸ் மற்றும் புனித சியனாவின் கேத்தரின் ஆகியோரின் பாதுகாப்பில் அவரை ஒப்படைத்துள்ளார்.

ஜூலை 23, வியாழனன்று, அனுப்பப்பட்ட அந்த வாழ்த்துச் செய்தியில், இத்தாலியின் திருஅவை மற்றும் சமூக வாழ்வின் மீது குடியரசுத் தலைவர் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்காக திருத்தந்தை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடியரசுத் தலைவர் மட்டரெல்லா, அவரது குடும்பத்தினர், அவருடன் பணியாற்றும் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் அன்புக்குரிய இத்தாலி நாட்டின் அனைத்து மக்களுக்கும் தனது நல்வாழ்த்துகளையும், திருத்தூது ஆசீரையும் திருத்தந்தை வழங்கியுள்ளார்.

குயிரினாலே அரண்மனையில் திருத்தந்தையின் வரலாற்றுச் சந்திப்பு

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள், இத்தாலி குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான குயிரினாலே அரண்மனைக்கு திருத்தந்தை அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டார்.

அந்தச் சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், உலக அமைதிக்கும் நிலையான முன்னேற்றத்திற்கும் பல்தரப்பு அனைத்துலக ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினார். ஐரோப்பாவில் குடும்பங்களைப் பாதுகாக்கும் கொள்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதம் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், உலகின் பல பகுதிகளில் தொடரும் போர்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அர்த்தமற்ற வன்முறையாலும், மரணத்தையும் அழிவையும் திட்டமிட்டு ஏற்படுத்துவோரின் கொடூரத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களை உலகம் காண வேண்டும் என்றும், அவர்களின் வேதனைக் குரலைக் கேட்க வேண்டும் என்றும்  அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை அவர்கள் மனித மாண்பை மையமாகக் கொண்டு செயல்படுவதையும், உரையாடலுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தையும் குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா பலமுறை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஜூலை 2026, 12:58