தேடுதல்

அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்களுடன் திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை, எண்ணிமத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் பொது நன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"எண்ணிமத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டில் பொது நன்மை பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் "மனிதகுலம் தன் சொந்த கண்டுபிடிப்புகளுக்கே இரையாகும் ஆபத்து உள்ளது" என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 28, வெள்ளியன்று, அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, "மனித குலத்தின் நலம்" ஒருபோதும் தனிப்பட்ட ஆதாயங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்குப் பொது அதிகார அமைப்புகள் பதிலளிக்க உதவுவதற்காகப் பணியாற்றி வரும் இந்த அமைப்பில் திருப்பீடமும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து தனது ‘மகத்தான மானுடம்’ (Magnifica humanitas) என்ற திருத்தூது மடலில் வெளிப்படுத்திய கவலைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, எண்ணிமத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சரியான சமநிலையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சியை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் அதிநவீன இயந்திரங்களை மனிதகுலத்தால் எப்போதும் கட்டுப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன் குறிப்பாக, மனித வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகள் இயந்திரங்களிடம் ஒப்படைக்கப்படுவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

மனித நுண்ணறிவின் தவிர்க்க முடியாத பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை வரவேற்ற திருத்தந்தை, மனிதகுலத்தின் நலனுக்குச் சேவை செய்யும் முடிவுகளை எடுக்குமாறு பொது அதிகார அமைப்புகளை கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆற்றல் மிக்க பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் கைகளில் குவியும்போது, அதனை நெறிப்படுத்தக்கூடிய ஒரு அறநெறி சார்ந்த கட்டமைப்பு வேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

எண்ணிமத் தொழில்நுட்பங்கள் வாழ்க்கைக்கும் அமைதிக்கும் சேவை செய்வதை உறுதிசெய்ய தனது ஆராய்ச்சியைத் தொடருமாறு அந்த நிறுவனத்தைத் ஊக்குவித்த திருத்தந்தை, அதன் உறுப்பினர்களுக்குத் தனது இறைவேண்டலையும் ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்து தனது உரையை நிறைவு செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஆகஸ்ட் 2026, 11:03