எளியோரின் துயர் துடைக்கும் வத்திக்கானின் ‘பிறரன்பு அவசர உதவிப் பிரிவு’
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கிறிஸ்தவர்கள் ஏழைகளை ஒரு கற்பனையில் வாழும் பிரிவினராகப் பார்க்காமல், முகம் மற்றும் கதைகளைக் கொண்ட உண்மையான மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்றும், அவர்கள் மூலம்தான் கிறிஸ்துவை நாம் நேரில் சந்திக்கிறோம் என்றும் பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் தலைவர் பேராயர் லூயிஸ் மரின் டி சான் மார்ட்டின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் தலைவராகத் தனது முதல் இரண்டு மாத காலப் பணி குறித்து, வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பேராயர் மார்ட்டின் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
பிறரன்புச் செயல்கள் செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வத்திக்கான் அலுவலகமானது, பலரும் "பிறரன்புச் செயல்களின் அவசர உதவிப் பிரிவு" என்று அழைக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறது என்றும் பேராயர் மார்ட்டின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தமக்கு வழங்கிய இந்த புதிய பொறுப்பை, வெறும் பதவியாகப் பார்க்காமல் மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் எளிய மக்கள் மீதான ஆழ்ந்த கடமையுணர்வின் வெளிப்பாடாகவே கருதுவதாக அவர் விவரித்துள்ளார்.
மேலும் திருஅவை மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளின் மையமாகத் திகழ்பவர்கள் ஏழைகளே என்றும் பேராயர் மார்ட்டின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் மார்ட்டின் அவர்கள், இத்திருப்பீடத்துறை அப்போஸ்தலிக்க ஆசீர்வாதங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களுக்காகப் பல்வேறு தொண்டுப் பணிகளையும் செய்து வருகிறது என்றும், குறிப்பாக, இலவச நல வாழ்வு மையங்கள், புனித பேதுரு வளாகத்திற்கு அருகிலுள்ள குளியலறை மற்றும் நலவாழ்வு வசதிகள், தங்குமிடங்கள், உணவு மற்றும் மருந்து விநியோகம் போன்ற அத்தியாவசிய பிறரன்புச் செயல்களை இது முன்னெடுத்து நடத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன், காசா, லெபனான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கான அனைத்து உதவிகளையும் இத்துறை ஒருங்கிணைக்கிறது என்றும், இத்தொண்டுப் பணிகள் அனைத்தும் தன்னார்வலர்கள், மருத்துவர்கள், திருத்தொண்டர்கள் மற்றும் கத்தோலிக்க அமைப்புகளின் கூட்டுறவோடு தேவையுடையோரைச் சென்றடைகின்றன என்றும் பேராயர் மார்ட்டின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
“Dilexi te” நான் உன்னை அன்பு செய்தேன் எனப்படும் திருத்தூது அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டிய பேராயர் மார்ட்டின் அவர்கள், "அன்பே கடவுள்" என்பதால் தொண்டு என்பது கிறிஸ்தவ வாழ்வின் இதயமாக உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்