தேடுதல்

"மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல்" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு "மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல்" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு  (@Fatima Mesaud Barreras)

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைக் காப்போம்: வத்திக்கான் மாநாட்டில் வல்லுநர்கள் முழக்கம்!

வத்திக்கானில் நடைபெற்ற "மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல்" என்ற மாநாட்டில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருத்தூது மடலான 'மகத்தான மனித நேயம்' (Magnifica humanitas) வெளிவருவதற்கு முன்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறை மற்றும் திருத்தந்தை அர்பானியா பல்கலைக்கழகம் இணைந்து, மே 21, வியாழன்று, "மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் மாநாடு ஒன்றை நடத்தின.

இதில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின்  முதலாவது திருத்தூது மடலான 'மகத்தான மனித நேயம்' (Magnifica humanitas) வெளிவருவதற்கு முன்னதாக, செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து வல்லுநர்கள் விவாதித்தனர். டிஜிட்டல் யுகத்தில் மனித மாண்பு, உண்மை மற்றும் உண்மையான உறவுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இம்மாநாட்டின் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

மனித சிந்தனையையும் தகவல் தொடர்பையும் நெறிமுறைகளும் (Algorithms) தானியங்கி அமைப்புகளும் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கக் கூடாது என்று திருப்பீட தகவல் தொடர்புத்துறையின் தலைவர் பவுலோ ருஃபினி அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும் இதேபோல், மனிதர்கள் வெறும் தரவுகளோ அல்லது நெறிமுறைகளோ அல்ல என்று சுட்டிக்காட்டிய கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜொஸெ தொலந்தினொ தெமெந்தோன்செ அவர்கள், மனிதநேயத்தைப் பாதுகாப்பது என்பது பலவீனமடைந்து வரும் மனித உறவுகள் தழைத்தோங்க உதவுவதாகும் என்று வலியுறுத்தினார்.

இதழியல், அரசியல் மற்றும் சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் குறித்து மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. தவறான தகவல்கள் பரவுதல், சமுதாய அவநம்பிக்கை, கோபத்தைத் தூண்டும் உத்திகள் மற்றும் மனித உறவுகளுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு உறவுகள் உருவாவது போன்ற ஆபத்துகளை வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலைகளுக்கும் அறவழித் தகவல் தொடர்பிற்கும் உதவிகரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு மாற்றாக அமையக் கூடாது என்றும் இதழாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் வலியுறுத்தினர்.

மாநாட்டின் மற்றொரு அமர்வு, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் ஏற்படும் சமத்துவமின்மை மற்றும் அநீதிகள் குறித்து கவனம் செலுத்தியது. விளிம்புநிலைச் சமூகங்களும் அவர்களது மொழிகளும் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில்  இருந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அதே வேளையில் ஒரு சில சக்திவாய்ந்த நாடுகளும் நிறுவனங்களும் மட்டுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகவும் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் ஜாய் புவலம்வினி அவர்கள், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாகுபாடு, சுரண்டல் மற்றும் ஆபத்தான கண்காணிப்பு முறைகள் குறித்து கவலை தெரிவித்தார். மேலும், இயந்திரங்களால் இயக்கப்படும் இந்த உலகில் மனித அடையாளத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2026, 12:13