கம்போடியா - தாய்லாந்து எல்லை மோதல்!
ஜெர்சிலின் டிக்ரோஸ்- வத்திக்கான்
கம்போடியாவில் உள்ள ப்ரீயா விகேர் கோவிலுக்கு அருகில் 5 நாட்கள் நீடித்த எல்லை மோதல் முடிவடைந்த உடனே அந்நாட்டின் 20 படைவீரர்கள் கடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தாய்லாந்து மீது குற்றம் சுமத்தியுள்ளது.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் தாய்லாந்து படைகளுடன் கைக்கொடுக்க முயன்றபோது கம்போடியா படை வீரர்கள் பிடிபட்டதாகக் கூறும் அந்நாட்டு அரசு,
அப்படைவீரர்களில் ஒருவர் தப்பித்ததாகவும், இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 பேர் தாய்லாந்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.
ஜூலை 24 முதல் 29 வரை நீடித்த இந்த மோதலினால், பொதுமக்களில் ஏறக்குறைய 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மோதலின் காரணமாக தாய்லாந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (இந்திய ரூபாயில் 40 கோடி) பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது தாய்லாந்து.
மேலும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள், இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடையூறு ஆகியவற்றால் இந்தப் பொருளாதார இழப்புகள் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது தாய்லாந்து.
அதேவேளையில், ப்ரீயா விகேர் கோவிலை உள்ளடக்கிய யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களை நோக்கி வான்வழி குண்டுவீச்சுகள் மற்றும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்து தாக்குதல் நடத்தியதாகவும், இது பாரம்பரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட முயற்சி என கம்போடியாவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மலேசியா நடுவராக செயல்பட்டுவரும் வேளை, கைதான கம்போடியா வீரர்களின் மீட்புக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்