திருத்தந்தையின் மறைக்கல்வியுரை – நற்செய்தி அறிவித்தல் பணி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, பல நாட்களுக்குப்பின் கடந்த வார கடைசியும், இப்புதனும் சூரிய ஒளியுடன் மிகப் பிரகாசமாக இருக்க, நற்செய்தி அறிவித்தல் என்பது திருஅவையின் பணி என்ற தலைப்பில் தன் கருத்துக்களை, புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 8, புதன்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பயணிகள் அமர்ந்திருக்க, முதலில், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலிருந்து 15ஆம் பிரிவின் முதல் பகுதி வாசிக்கப்பட்டது.
- சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.2நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.
- நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே. (1 கொரி. 15,1-3)
பின்னர் திருத்தந்தை, தன் மறைக்கல்விச் சிந்தனைகளை அங்கிருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
புதன் மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர் சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று நற்செய்தி அறிவித்தலின் சமயக்கூறு குறித்து நோக்குவோம்.
நற்செய்தி அறிவித்தல் என்பது, தனியாக இதற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சிலரின் பணியன்று, மாறாக, திருஅவையின் அப்போஸ்தலிக்க விசுவாசத்திற்கான ஒரு ஒன்றிணைந்த பணியாகும், மற்றும், அதன் முழுமை நிலையில் ஒவ்வொரு தலைமுறை தலைமுறை வழியாக கடத்திச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். திருவையின் இக்கூறிலிருந்து நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வத்தை, அல்லது பற்றார்வத்தை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தப் பற்றார்வமே, கிறிஸ்தவ செய்தி உருத்திரிபு செய்யப்படாமல் காக்கப்படவும், உலகாயுத ஆசைகளை அதற்குள் கொணரவும் சிந்திக்கவும் இடம்கொடாமல் காக்கிறது. திருஅவையின் மறைப்பணி நடவடிக்கைகள் குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கருத்தானது, அனைத்து நற்செய்தி அறிவிப்புப் பணிகளும் தந்தையாம் இறைவனின் அளவிடமுடியாத அன்பில் தன் ஆதாரத்தைக் கொண்டதாகவும், இறைமகன் மற்றும் தூய ஆவியின் மறைப்பணிகளால் இவ்வுலகில் ஊற்றப்பட்டதாகவும் எடுத்துரைத்து, இந்த பணியானது உலகின் கடை எல்லைவரைக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று என்பதை விளக்குகிறது. திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மறைப்பணிச் சீடர்களாக, கிறிஸ்துவின், தன்னையேத் தியாகம் செய்யும் அன்பைப் பின்பற்றி அவரின் வார்த்தையின் ஒப்புரவு வல்லமைக்கும், உண்மைக்கும், நம்பத்தகும் சான்றுகளாக, தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மனித குல குடும்பத்திற்கும் விளங்க வேண்டும் என அழைப்புப் பெறுகிறார்கள்.
இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வழங்கியதோடு, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
